சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
வவ்வால்கள் உலகின் இரண்டாவது பெரிய பாலூட்டிகளாகும். சுற்றுச்சூழல் சமநிலைக்கும், விவசாயத்திற்கும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான வங்வால்கள் தங்கள் உடல் எடையில் 100% வரை அந்துப்பூச்சி, வண்டு, கொசுக்கள் உள்ளிட்டவற்றை உண்கின்றன.. இதனால் பூச்சி கட்டுபடுத்தபடுவதுடன் சுற்றுச்சூழல் சமநிலையினை பராமரிக்க உதவுகிறது மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தேவையை குறைக்கிறது. பல தாவரங்கள் வவ்வால் மகரந்த சேர்க்கையினை மட்டுமே நம்பி உள்ளது.
பழங்களை உண்டபின் விதைகளை வெளியேற்றி காடுகளின் மறு உருவாக்கத்திற்கு உதவுகின்றன. மழைக்காடுகளின் மீட்பில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் எருவில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் அதிகம் உள்ளதால் மண்வளத்தை அளிக்கும் சிறந்த இயற்கை உரமாகவும் திகழ்கிறது. கொசுக்கள் உற்பத்தியை தடுப்பதால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்பரவல் குறைய உதவுகிறது. தமிழ்நாட்டின் விவசாயம், காடுகள், பல்லுயிர் பெருக்கத்திற்கு இவற்றின் பங்களிப்பு அவசியமானதாகும்.
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் காவல்நிலைய வளாகத்தில் உள்ள மருதமரத்தில் 100 வருடங்களுக்கு மேலாக வவ்வால்கள் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. அருகாமையில் உள்ள ராமலிங்க சுவாமி கோவில் விழா மற்றும் இதையொட்டி உள்ள கோவில் வைபவங்களின் போது இப்பகுதியில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் வாழ்ந்து வரும் வவ்வால்கள் இறப்பதுடன் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. வவ்வால்கள் இரவில் செயல்படும் உயிரினங்கள். அவை எக்கோ லொகேஷன் எனும் ஒலி அலைகளை பயன்படுத்தி இருளில் வழிநடப்பதுடன் உணவு தேடல் மற்றும் இடம் கண்டுபிடித்தலை செய்கின்றன.
பட்டாசுகளின் அதிக சத்தம் அவற்றின் ஒலி அலைகளை குழப்புகிறது. பட்டாசுகளின் திடீர் ஒளி அவற்றின் செயல்பாடுகளை முடக்குகிறது. மேலும் அவற்றின் மன அழுத்தம் மற்றும் உடல் பாதிப்புகளுக்கும் காரணமாகிறது. இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் விவசாயம் மற்றும் சுகாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். எனவே குறிப்பிட்ட வவ்வால் வாழ்விடங்களில் பட்டாசு வெடிப்பதை தடை செய்திட வேண்டும். வவ்வால்கள் பாதுகாப்பு Forest Conservation Act மற்றும் Biological Diversity Act படி உறுதி படுத்தப்பட்டு உள்ளது. அவற்றை வேட்டையாடுவது, கொலை செய்வது, வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டு உள்ளதுடன் இதில் ஈடுபடுவோர் கடும் தண்டனைக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
பட்டாசு வெடிக்கும் சத்தம், புகை மற்றும் அதிர்வு பறவைகளின் இனப்பெருக்கத்தை கடுமையாக பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு பல் வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்க கிராம மக்களே தடை விதித்து உள்ளதோடு தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை பட்டாசு வெடிக்காமல் கொண்டாடுகின்றனர். ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதனை கடைபிடிக்கின்றனர். நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பகுதியில் மக்கள் பட்டாசு வெடிப்பதையும் ஒலிபெருக்கி பயன்படுத்துவதையும் 25 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர். சேலம் மாவட்டம் வேளாவள் தோப்பு பகுதியில் வசிக்கும் வவ்வால்களுக்காக கிராம மக்கள் கடந்த 75 ஆண்டுகாலமாக பட்டாசுகளை மறந்து போய் விட்டனர்.
இதுபோல் தமிழகத்தின் பல கிராம மக்கள் சட்டத்தினை கடை பிடிக்க வேண்டும் என்று இல்லாமல் பறவைகளை பாதுகாப்பு என்பதை தங்கள் கடமையாக கருதி செயல்பட்டு வருகின்றனர். இந்த பூமி நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல எல்லா உயிரினங்களும் வாழ உரிமை உள்ளது. அதற்கு ஊறுவிளைவிப்பதில் நமக்கு கிடைக்கும் சந்தோஷத்தை புறம்தள்ளுவதே நமக்கும், சுற்றுசூழலுக்கும் நன்மை தருவதாகும். அவ்வகையில் இயற்கையின் நண்பர்களாக திகழும் வவ்வால்கள் விவசாயத்திற்கும், சுற்றுசூழலுக்கும் தரும் நன்மை கருதி அதனை, அதன் வாழ்விடத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என கருதி செயல்படுவோம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply