சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக் காவிரி பகுதியில் உருவாகும் காவிரி ஆறு அம்மாநிலத்தின் குடகு, மைசூர், மாண்டியா, பெங்களூர், சாம்ராஜ்நகர் வழியாக தமிழகத்தில் நுழைகிறது. அதன்பின் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. காவிரி ஆறு பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயம் மற்றும் மின்உற்பத்திக்கும் அடிப்படையாக உள்ளது.
இந்த ஆற்றில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் காட்மியம், ஈயம் போன்ற நச்சுத்தன்மை கொண்ட கன உலோகங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இந்த ஆற்றின் நீரை பயன்படுத்துவோருக்கு பல்வேறு நோய்கள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளதோடு இதனால் நிலத்தடி நீர் ஆதாரமும், சுற்றுச்சூழலும், விவசாயமும் பாதிக்கப்படும் அவலநிலை உள்ளது. ஈரோடு, திருப்பூர் பகுதியில் உள்ள நூற்றுகணக்கான சாய ஆலைகள், சலவை ஆலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள் தங்கள் ரசாயனம் கலந்த கழிவுநீரை ஆற்றில் திறந்துவிடுகின்றன.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள பெரும்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை ஆகியவை வழியாக சுத்திகரிக்கப்படாத வீட்டு கழிவு, தொழிற்சாலை கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. திருப்பூரின் பின்னலாடை ஆலைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்து இறுதியில் க௹ருக்கு அருகே இந்த ஆறு காவிரியில் கலக்கும் நிலையில் காவிரி மாசடைகிறது. மேலும் இப்பகுதி மாநகர கழிவுகள் கொட்டப்படும் குப்பைத் தொட்டியாக காவிரி ஆனதால் அதன் நீர் கலர் மாறி துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகின்றன.
காவிரியின் துணை ஆறான பவானி ஆறு அதன் பங்கிற்கு கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாய மற்றும் ரசாயன கழிவுகளை சுமந்து வந்து கூடுதுறையில் சங்கமிக்கிறது. ஏற்கனவே கர்நாடக பகுதியில் உள்ள ஆலைகளின் கழிவுநீர் ஆற்றில் திறந்து விடுவதாக தொடர்ந்து மக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் சாய ஆலைகள் சுத்திகரிக்காமல் கழிவுகளை திறந்துவிடுவதால் காவிரி தற்போது கலர் மாறி கருப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கிறது.
இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதால் பல்வேறு மாவட்ட மக்களும் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் நீரை விவசாய தேவைகளுக்கோ, ஏனைய பயன்பாடுகளுக்கோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே குறிப்பிட்ட பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சட்டவிரோதமாக சுத்திகரிக்காமல் கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுகள்/ கழிவுநீர் கலக்காமல் தடுத்து காவிரியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பது அவசர அவசியமானதாகும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply