சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
காலிங்கராயன் கால்வாய் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழமையான பாசன கால்வாய் மட்டுமல்ல நதிநீர் இணைப்பு திட்டங்களின் முன்னோடியாகவும் கருதப்படுகிறது. கொங்கு மண்டலத் தலைவரான காலிங்கராயன் என்பவரால் கி.பி 1271 ல் தொடங்கி 1283ல் இக்கால்வாய் பணிகள் முடிக்கப்பட்டது. பவானி ஆற்றில் இருந்து நீரை திருப்பி வறண்ட பகுதிக்கு பாசனத்திற்கு வழங்கிடும் வகையில் சுமார் 90.5கி.மீ நீளத்திற்கு இக்கால்வாய் அமைக்கப்பட்டது. பவானி ஆற்றில் காலிங்கராயன் அணையில் தொடங்கி கொடுமுடி அருகே நொய்யல் ஆற்றில் இக்கால்வாய் சென்று சேருகிறது.
காலிங்கராயன் கால்வாய் நேராக இல்லாமல் இயற்கையான ஆறுபோல வளைந்து நெளிந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. நீரின் வேகத்தை குறைக்கவும், கரைகளுக்கு சேதத்தை தடுக்கவும், நீர் தேங்கி சுற்றி உள்ள வயல்களுக்கு சமமாக பயன்படுத்திட உதவும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்திடவும் இத்தகைய முறையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட விவசாயத்தின் முதுகெலும்பாக திகழ்வதோடு ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 15,743 ஏக்கர் நிலத்தின் அடிப்படை நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.
மக்களின் மற்றும் விவசாய தேவைக்கான நீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், பண்டைய தமிழர்களின் பொறியியல் திறமையினை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்ட காலிங்கராயன் கால்வாய் மகத்தான நோக்கத்தின் வரலாற்று அடையாளமாய் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் தற்போது மாசுபாடு காரணமாக இக்கால்வாய் தனது பொலிவினை இழந்து வருகிறது. இதனால் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அந்நோக்கம் தடம்புரண்டு கழிவுநீர் கால்வாயாக உருமாற்றம் அடைந்து வருகிறது.
ஈரோடு பகுதியில் சாயக்கழிவு, தோல் ஆலைக்கழிவு, சாக்கடை நீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் கால்வாய் நீர் கருப்பு, சிவப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில் மாற்றம் அடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் தெர்மாக்கோல் கழிவுகள், தொழிற்சாலை மற்றும் கோழி பண்ணை கழிவுகள், நெகிழி குப்பைகள் தொடர்ந்து மேலும் சேகரமாகி வருவதால் பழமையான இக்கால்வாய் பாழடைந்து சீர்குலைந்து வருகிறது.
இத்தகைய நிலையினால் காலிங்கராயன் கால்வாய் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகள் சேதம் அடைந்தும் சீரமைக்கப்படாததால் பயன்படுத்த இயலாத வகையில் பெருமளவில் நீர்விரயமாகிறது. நீர்நிலையின் உயிர் ஓட்டம் கழிவு கலப்பால் தடைபடுகிறது. அவ்வகையில் காலிங்கராயன் கால்வாயின் உயிர்துடிப்பு கழிவு கலக்கும் ஒவ்வொருவராலும் ஒடுக்கப்பட்டு வருகிறது. கொங்கு மண்டலப் பகுதியினை வளம் கொழிக்க வைத்திடும் இக்கால்வாயினை காக்கும் விதத்தில் கழிவு கலப்பதை தடுத்து, பழுதுகளை பராமரித்து பாதுகாத்திட வேண்டும். இதுவே நாம் மகத்தான தலைவர். காலிங்கராயனிற்கு செய்யும் உண்மையான நன்றிக் கடனாக இருக்கும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply