சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
பறையாட்டம் என்பது தமிழ்நாட்டின் மிகப்பழமையான பாரம்பரிய நாட்டுப்புறக் கலைவடிவம். இதனைப் பற்றி தொல்காப்பியம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.பறை என்னும் இசைக்கருவியை வாசித்துக்கொண்டே தாளத்திற்கு ஏற்ப உடலை அசைத்து ஆடுவதால் இக்கலை பறையாட்டம் என அழைக்கப்பட்டது. ஆதிகாலத்தில் பறை போர்களத்தில் செய்தி அறிவிக்க, மக்களை கூட்ட, ஆபத்து தொடர்பாக எச்சரிக்கை செய்ய, விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க என பயன்படுத்தப்பட்டது.
அதன்பின் கிராம விழாக்கள், கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் ஆகியவற்றில் இரண்டற கலந்தது. பறையின் ஓசை மக்களை ஒன்றிணைக்கும் சக்தி வாய்ந்தது.ஆவேசம், மகிழ்ச்சி, எழுச்சி, வீரம் உள்ளிட்ட உணர்வுகளை தூண்டுவதால் இக்கலை போராட்ட சின்னமாகவே கருதப்பட்டது. நாளடைவில் குறிப்பிட்ட சமூகத்தினர் பயன்படுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டதோடு இறுதி சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தும் இசைக்கருவியாக புறக்கணிப்பிற்கு உள்ளானது.
பறை கலைஞர்கள் இறுதி சடங்குகளுக்கு மட்டுமே அழைக்கப்படும் நிலை உருவான சூழலில் 1950 களில் குறிப்பிட்ட சமூகத்திற்கு மீது சுமத்தப்பட்ட அவமானம் மற்றும் தீண்டாமை கொடுமையின் அடையாளமாக கருதப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பறை அடிப்பதை நிறுத்தி பறைக் கருவிகளை எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இது சாதி அடிப்படையிலான தொழில் திணிப்பு மற்றும் தீண்டாமைக்கு எதிரான நிகழ்வாக கருதப்படுகிறது.
கிளாசிக்கல் இசை, நகரமயமாக்கல்/ மேற்கத்திய திரைப்பட இசை ஆதிக்கம், பாரம்பரிய கலை மீதான ஆர்வக் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் பறையாட்டம் நமது பார்வைகளில் இருந்து தவறி ஆதரவை தேடும் குழந்தை போல் ஆனது. இது அவமான சின்னம் அல்ல..தமிழ் பண்பாட்டின் அடையாள சின்னம். இதனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். பாரம்பரிய மக்கள் கலையான பறையாட்டம் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவதோடு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
இக்கலையினை நம்பி உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் விதத்தில் அரசு நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளில் இக்கலையினை ஈடுபடுத்திட வேண்டும். இக்கலையில் ஈடுபட்டு வருவோரை ஊக்கப்படுத்திடும் வகையில் மாவட்டங்கள் தோறும் நடைபெறும் புத்தகம்,சுற்றுலா உள்ளிட்ட அரசுவிழாக்களில் இவர்களை இடம்பெற செய்வதோடு விருதுகள் வழங்கி கெளரவப்படுத்திட வேண்டும். மேலும் பறை தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கு நிதி உதவி அளிப்பதோடு நலிந்துவரும் நாட்டுப்புற கலைகள் உயிர்பெறும் வகையில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply