சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சாலைகள், நடைபாதைகள், போக்குவரத்து சந்திப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், மத உருவங்கள், பொதுநபர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் இதனால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுவதாக உள்ளது. மேலும் குறிப்பிட்ட சிலைகள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் சட்ட ஒழுங்கு சீர்குலைவதால் சமூக அமைதியே பாதிக்கும் நிலைக்கு செல்கிறது.
இதனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் (நீதிபதிகள் R.M.Lodha மற்றும் S.J.Mukhopadhaya அமர்வு) பொது இடங்களில் சிலைகள் நிறுவவும், அது தொடர்பான கட்டமைப்புகள் அமைக்கவும் தடை விதித்து 18.1.2013 அன்று உத்தரவிட்டது. தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுவோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் 2022ல் தெரிவித்து உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக எந்த அனுமதியும் வழங்கபடவில்லை எனவும் உறுதி அளித்து உள்ளது.
மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளை 2022 மற்றும் 2025 ல் உரிய அனுமதியின்றி தனிநபர் அல்லது அரசியல் கட்சிகள் சார்பில் சிலைகள் நிறுவவும் தடை விதித்தது. எந்த கட்சி தலைவர்களின் சிலைகளாக இருப்பினும் பொது இடத்தில் வைக்க கூடாது என தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது. செப்டம்பர் 2025ல் முன்னாள் முதல்வர். கருணாநிதியின் சிலையினை நிறுவ அனுமதி கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
ஏற்கனவே அனுமதி இன்றி பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றிடவும் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தபோதும் அதனை நடைமுறைப்படுத்துவதில் அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் இத்தகைய சிலைகளால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இத்தகைய சிலைகளை பூங்கா உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் வைக்கலாம்.
தமிழ்நாட்டில் சாலை ஓரங்கள், நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பகுதி உள்ளிட்ட பொது இடங்களில் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சமூக அமைப்புகளின் நிரந்தர கொடிகம்பங்கள் நிறுவ மதுரை உயர்நீதிமன்றம் 2.1.2025 அன்று உத்தரவு பிறப்பித்த நிலையில் அனைத்து கொடிகம்பங்களும் அகற்றப்பட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டையும் ஆகஸ்ட் 2025ல் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது போலவே பொது இடங்களில் அமைக்கப்பட்ட சிலைகளும் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் கொடிகம்பம் அகற்ற மேற்கொண்ட செயல்பாடுகளைப் போல சிலைகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply