சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தஞ்சாவூர் மாவட்டத்தில் செல்லும் வடவாறு காவிரியின் கிளை ஆறாகும். இது வெண்ணாற்றில் இருந்து தென் பெரம்பூர் அருகே பிரிந்து தஞ்சாவூர் நகரத்திற்கு வடக்கே கரந்தை, கீழவாசல் பகுதிகள் வழியாக நகரத்திற்கு வடக்கே செல்வதால் வடவாறு (வடக்கு ஆறு) என அழைக்கப்படுகிறது. இது சுமார் 30கி.மீ வரை பாய்ந்து அதன் பின் விரிவாக்க கால்வாயாக 70கி.மீ பயணித்து முத்துப்பேட்டை அருகே திருமேனி ஆறுவழியாக கண்ணனாற்றில் கலக்கிறது.
தஞ்சாவூர், அம்மாபேட்டை, நீடாமங்கலம், மன்னார்குடி, மதுக்கூர், கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 72 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர்பாசனம் அளிக்கிறது. தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வடவார் கால்வாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. நகரின் பலபகுதிகளின் மேல்நிலை தொட்டிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இது திகழ்கிறது. பொன்னியின் செல்வன் உள்ளிட்ட இலக்கியங்களிலும் சோழர் வரலாற்றிலும் இந்த ஆறு இடம்பெற்று உள்ளது.கி.பி.1621ல் தஞ்சை நாயக்க மன்னர் ரகுநாத பூபால் முன்னிலையில் வடவாறு ஆற்றங்கரையில் ஸ்ரீவேங்கடநாதர் சன்னியாச தீட்சை பெற்றார். இங்கு தான் அவர் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என பெயர் பெற்றார்.
இங்குள்ள ராகவேந்திர மடம் இன்றும் இதன் வரலாற்று சாட்சியாய் உள்ளது. இத்தகைய ஆன்மீக அடையாளமாகவும், சோழர் காலத்தில் கி.பி. 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட வீரநாராயண ஏரிக்கு நீர் ஆதாரமாகவும், தஞ்சாவூர் தரணியினை செழிக்க வைத்த வடவாறு இன்று தனது அழகை இழந்து அழியும் அபாயத்தில் உள்ளது. தஞ்சாவூர் மாநகர கழிவுகள் இந்த ஆற்றில் கலந்து நீர் மாசுபாடு அடைந்து கழிவுநீர் கால்வாயாக மாறிப்போனது. இதனால் துர்நாற்றத்துடன் சுகாதார கேடு உருவாக்கி வருவதோடு கீழ்மடைவரை விவசாயத்திற்கும் உதவாத நிலையில் உருமாறிப்போனது.
வடவாற்றில் படர்ந்து வளர்ந்த ஆகாயத்தாமரை மேலும் இந்நீரை பாழ்படுத்தி வருவதோடு நிலத்தடி நீர் ஆதாரத்தையும் பாதித்து வருகிறது.இதனை அகற்றவோ பாதிப்புகளை தடுக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தஞ்சாவூர் மாநகராட்சி. நீர்வளத்துறை இணைந்து போர்கால அடிப்படையில் கழிவுநீர் ஆற்றில் நேரடியாக கலப்பதை தடுத்திட வேண்டும். சேறு, ஆகாய தாமரை உள்ளிட்டவற்றை அகற்றி ஆற்றின் ஆழத்தையும், நீர் ஓட்டத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து நீர் தர பரிசோதனை மேற்கொண்டு மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கொட்டுவதை தடுத்து மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். ஆற்றின் கரைப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஒருங்கிணைந்த நதி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கரை பாதுகாப்பு சுவர் அமைக்கவும், நீர்வளம் காக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வடவாறு தஞ்சாவூரின் வரலாறு, விவசாயம், ஆன்மீகம் மற்றும் அன்றாட வாழ்வோடு இணைந்தது. எனவே இதனை தஞ்சையின் கூவமாக மாற விடாமல் தடுத்திட உடனடியாக சீரமைத்து காப்பது அவசியம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply