குமரி மாவட்டத்தின் வர்த்தக தலைநகரமாக விளங்கும் மார்த்தாண்டம் நகரின் இதயப்பகுதியாக அமைந்தது காந்தி மைதானம். பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்தே தங்கள் பகுதிக்கு சென்று வருகின்றனர். மேலும் வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், வங்கிகள் என பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் மக்களுக்கு இப்பகுதி பிரதான இடமாக திகழ்வதால் எப்போதும் உயிர்துடிப்போடு இப்பகுதி இருக்கும்.
இந்நிலையில் பயணிகள் மற்றும் மக்கள் நலன் கருதி இப்பகுதியில் மேம்பாலத்தின் அடிவாரத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் விதத்தில் தலா 2 கழிப்பறைகள் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதி வழியாக செல்வோருக்கும், பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த பயன் அளிப்பதாய் அமைந்தது.
கடந்த இரு வருடகாலமாக குறிப்பிட்ட கழிப்பிடங்களை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதோடு அதனை பயன்படுத்திட இயலாதவாறு பூட்டி விட்டது. இதனால் இவற்றை பயன்படுத்திட இயலாத பயணிகள் அருகாமையில் உள்ள பகுதியினை பயன்படுத்தி வரும் பரிதாப நிலை உள்ளது. இதனால் இதன் சுற்றுவட்டார பகுதியில் கழிவுநீர் தேங்கி குளமாய் காட்சி அளிப்பதோடு துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேட்டிற்கு சாட்சியாய் விளங்குவதோடு இதன்மூலம் பல்வேறு தொற்றுநோய்கள் உருவாகவும் மக்கள் பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. இருந்தும் குழித்துறை நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காததால் குறிப்பிட்ட கழிப்பிடங்கள் கவனிப்பாரின்றி மக்கள் பயன்படுத்த இயலாத நிலையிலும், பாதிப்புகளை உருவாக்கிடும் வகையிலும் உள்ளன. எனவே குறிப்பிட்ட பகுதியில் உள்ள கழிப்பிடங்களை பொதுமக்கள் பயன்படுத்திடும் வகையில் பராமரித்து செயல்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம்.T.ஜெகதீஷ், குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, துணை தலைவர் M.கேதரின் பேபி, துணை செயலாளர் பேரா.C.மோகன்,,அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், முஞ்சிறை ஒன்றிய செயலாளர் R.சாம் எட்வர்ட் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply