சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
இந்தியாவில் பள்ளிக்கல்வி முறை குறித்த அறிக்கையினை நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டது. இதில் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளிகளில் மின்சார இணைப்பு இல்லை எனவும் ஏறத்தாழ ஒரு லட்சம் பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பிட வசதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சி தருவதாக உள்ளது.. கல்விக்குப் புகழ்பெற்ற டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் பள்ளி கல்விக்கு தங்கள் உள்நாட்டு உற்பத்தியில் கணிசமாக செலவிடும் நிலையில் இந்தியா தனது ஜி.டி.பி யில் 4.6% மட்டுமே கல்விக்காக செலவிட்டு வருகிறது. இதனால் அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால் மாணவ, மாணவியர் பரிதவிக்கும் நிலையே உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு பள்ளியில் பயில ஊக்குவிக்கப்படும் சூழலில் அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக திகழ்கின்றன. இருப்பினும் இப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முனைப்பு காட்டப்படாததால் மாணவர் சேர்க்கை வெகுவாக பாதிக்கும் நிலை உள்ளது. சமீபத்திய UDISE (Unified District information System for Education) தரவுகளின் படி தமிழக அரசு பள்ளிகளில் சிறுவர்களுக்கான கழிப்பறை வசதி 75.6% பள்ளிகளில் மட்டுமே உள்ளது. அதில் 72.6% மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. சிறுமிகளுக்கான தனிக் கழிப்பறை 97.9% பள்ளிகளில் உள்ளது. இதில் 94.7% செயல்பாட்டில் உள்ளது என தெரியவருகிறது.
பல அரசுப்பள்ளிகளின் கழிப்பறைகள் சரிவர பராமரிப்பு இன்றி கதவுகள் இன்றி, சுத்தம் செய்யப்படாமல், பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது. உரிய பணியாளர்கள் இல்லாமல் கழிப்பறைகள் மாணவர்களை கொண்டே தூய்மை செய்யப்படுவதும் நிகழ்கிறது. பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோர் கழிப்பிடம் குறித்து கவலைப்படுவது இல்லை. இதுபோல் பல லட்சம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளும் மாணவர்களை வணிக பொருளாக பார்க்கின்றார்களே தவிர அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் அக்கறை காட்டுவது இல்லை. மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்த கழிப்பறைகள், மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க குறிப்பிட்ட நேர ஒதுக்கீடு செய்யாத நிலையே உள்ளது. கழிப்பிடம் என்பது நாம் தட்டி கழிக்க வேண்டிய விஷயம் என கருதிவிடக்கூடாது. மாணவ மாணவியரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் தொடர்பு உடையதாகும்.
திறந்த வெளியில் அல்லது அசுத்தமான இடங்களில் உபாதை கழிப்பதால் வயிற்றுபோக்கு, சிறுநீரகத்தொற்று, புழு தொற்று போன்றவை ஏற்படுகின்றன. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சியைப் பாதிக்கும். கழிப்பிடம் பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் வயிறு, சிறுநீரகப்பிரச்னை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. மாதவிடாய் காலங்களில் மாணவிகள் பேட் மாற்ற இடமின்றி தொற்றுநோயிற்கு உள்ளாகும் அவலம் நேரிடுகிறது. திறந்தவெளி மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளை பயன்படுத்தும் நிலையில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சரிவர பராமரிக்கப்படாத கழிப்பிடங்கள் நோய்களின் தாய்வீடாக திகழ்வதால் மாணவ, மாணவியர் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
சுகாதார குறைபாடு காரணமாக 23% பெண்கள் கல்வியினை தொடராமல் நிறுத்தி விடுவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதனால் இடைநிற்றல் எண்ணிக்கை அதிகரிப்பதால் பெண்கல்வி பாதிக்கப்படுவது சமூகத்திற்கு பேரிழப்பாகும். Unicef, water Aid போன்ற அமைப்புகளின் ஆய்வுகள்படி அரசுப்பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு சரியான கழிப்பிட வசதி இல்லை என்கிறது. இப்பிரச்னை மாணவ/மாணவிகளின் கல்வி, ஆரோக்கியம், கண்ணியம் உள்ளிட்டவற்றை பாதிக்கிறது. இது ஒதுக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல மாணவர்களின் உரிமை சார்ந்த பிரச்னை என்பதை மனதில் கொண்டு மாணவ, மாணவியர் நலன் காக்கும் வகையில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் சுகாதாரத்துடன் கழிப்பிடம் செயல்படுவதை தமிழக அரசு உறுதிபடுத்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply