குமரி மாவட்டத்தில் பழங்காலத்தில் சுமைதூக்கி செல்பவர்கள் இளைப்பாறுவதற்காக சுமைதாங்கிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மனிதனின் தோள் உயரத்தில் சுமார் 5 அடியில் கிடைமட்டமாக ஒரு கல்லை தாங்கி நிற்கும் வகையில் மூன்று கற்களைக் கொண்டவை இதன் அமைப்பாகும். தலைச்சுமை தூக்கி வருபவர்கள் மற்றவர்கள் உதவி இன்றி நின்ற நிலையிலேயே சுமையை கல்லில் இறக்கி பின் ஏற்றும் வகையில் இவை பயன் பட்டன.
போர்களில் இறந்த வீரர்கள், அரச பரம்பரையின் நினைவாக, கர்ப்பிணிகளின் இறப்பு, வளர்ப்பு பசு இறப்பு மற்றும் முன்னோர் நினைவாக சுமைதாங்கி கற்கள் வைக்கும் நடைமுறை அக்காலத்தில் இருந்தது. மன்னர் ஆட்சிகாலத்தில் இதனை நிறுவ உரிய அனுமதி பெற வேண்டி இருந்தது. அதன்பின் கி.பி 19ம் நூற்றாண்டிற்கு அரசு அனுமதி தளர்த்த பட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் இவை அமைக்கப்பட்டன. குறிப்பாக மலைப்பகுதிகள், கிராமபுற சாலைகள், பழைய வர்த்தக பாதைகளில் மக்கள் நலன்கருதி அமைக்கப்பட்டன.
போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்டபின் இவை பயன்பாட்டில் இல்லாத நிலையில் கவனிப்பாரின்றி கைவிடப்பட்டன. சில இடங்களில் சுமைதாங்கி இசக்கியம்மன் என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்த வரலாற்று தொன்மை வாய்ந்த, தமிழர்களின் அறநெறி அடையாளமாய் காணப்பட்ட சுமைதாங்கிகள் அழிக்கப்பட்டு தற்போது ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, மருங்கூர், புதுக்கடை, கோட்டார், வட்டம், அனந்தன் பாலம், இறச்சகுளம், அம்மாண்டி விளை உள்ளிட்ட ஒருசில இடங்களில் மட்டுமே எச்சமாய் மிச்சம் இருக்கின்றன.
வரலாற்று ரீதியாக இப்பகுதி பல்வேறு மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததாலும், பல்வேறு போர்கள் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று உள்ள நிலையில் இங்குள்ள நடுகற்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.திற்பரப்பு, குலசேகரம் பகுதிகளில் உள்ள நடுகற்கள், மறுகால் வாடி பகுதியில் வட்டெழுத்துக்களுடன் பொறிக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள், மயிலாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீரகற்கள், மருங்கூர், வெள்ளிமலை போன்ற பகுதியில் வீரர்களுக்காய் அமைந்த நடுகற்கள் என பல்வேறு வரலாற்று சான்றுகள் அழிவின் விளிம்பில் உள்ளன. இதனை தொல்லியல் துறையினர் முறையாக ஆய்வு செய்வதோடு எஞ்சிய சுமைதாங்கிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், மகளிர் அணிச் செயலாளர் R. சாராபாய், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணிசெயலாளர் CV முருகன், தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply