சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
அதானி குழுமம் சார்பில் புனல் மின்நிலையத்திட்டத்தினை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அரசம்பட்டு (அல்லேரி) கிராமப்பகுதியில் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இத்திட்டம் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஜவ்வாது மலையில் அமிர்தி காடுகளுடன் இணைந்த சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைக்க 2024 ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.ஜவ்வாது மலை வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவி உள்ளதாகும். இதன் அடர்ந்த காடுகளில் பீமன் அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் உருவாவதுடன் உயர் உயிரியல் பன்மைக்கு பெயர் பெற்றதாகும்.
இவ்வனப்பகுதியில் அகஸ்திய மரங்காடை, சிறுத்தை, காட்டு எருமை, மான் இனங்கள், காட்டு நாய், இந்திய பாங்கோலின், இந்திய ராட்சத அணில், மலபார் கிரே ஹார்ன்பில், ஆந்தைகள், கழுகுகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உயிர்வாழ்வதுடன் கரடிகள் பெருமளவில் வசித்து வருகின்றன. இக்காடுகள் நீர் ஆதாரத்திற்கு அடிப்படையாய் திகழ்வதால் இதன் மூலம் இப்பகுதியில் விவசாயம் பெருமாவில் நடக்கிறது.
இத்திட்டத்திற்கென தேர்வு செய்யப்பட்டு உள்ள சுமார் 337 ஹெக்டேர் பகுதியில் 228 ஹெக்டேர் பரப்பு அரசம்பட்டு காப்புக்காட்டிற்குள் வருகிறது. இந்த பகுதி அழிக்கப்படுவதால் அரியவகை உயிரினங்களின் வாழ்விடம் இழக்கப்படும். ஜவ்வாது மலை – அமிர்தி காடுகளுக்கு இடையிலான விலங்கு-பறவை நடமாட்டம் தடைபடுவதோடு அவற்றின் வாழ்க்கை துண்டாடப்படும் நிலை உள்ளது. இத்திட்டத்திற்கான கட்டுமானத்திற்கு என காடழிப்பு செய்யப்படுவதால் மனித விலங்கு மோதல் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கை இடர்பாடுகளுக்கே வழிவகுக்கும்.
பாலாறு ஆண்டுக்கு சுமார் 65 நாட்கள் மட்டுமே நீர்வரத்து உள்ள நிலையில் இதில் ஏற்படுத்தும் நீர் திருப்பம் இதனை நம்பி உள்ள பகுதியில் நீர்வரத்தின்றி வறட்சியினையே உருவாக்கும். மேலும் இத்திட்டத்திற்கான மின்உற்பத்தி ஒரு யூனிட்டிற்கு ரூ 9 செலவாகிறது. இதன்படி சந்தை விலை ரூ 10 ஆகிறது. இதனை ஒப்பிடும் போது காற்றாலை/ சோலார் உள்ளிட்ட திட்டங்களே லாபகரமானது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஜவ்வாது மலை சுற்றுச்சூழல் அமைப்பே நிரந்தரமாக பாதிப்பு அடையும் ஆபத்து உள்ளது.
இத்திட்ட அனுமதிக்கு என மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் 15.6.26 அன்று அதானி குழுமத்தார் விண்ணப்பித்து அனுமதி கேட்டு உள்ளனர். இத்திட்டம் புதுப்பிக்கதக்க எரிசக்தி தேவையினை பூர்த்தி செய்யும் என்றாலும் உயர் உயிரியல் பன்மை வாய்ந்த பகுதியில் அமைக்கப்படுவதால் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் இதனை எதிர்க்கின்றோம். காலநிலை மாற்றம்/ சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் இயற்கைசூழலுக்கும், மக்களுக்கும் பாதிப்புகளை உருவாக்கும் இதுபோன்ற திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply