சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
குமரி மாவட்டம் மிடாலம் கடற்கரையில் கடந்த 9 ந்தேதி சுமார் 2 டன் உடைய புள்ளி சுறாமீன் இறந்து கரை ஒதுங்கியது. இது போலவே முட்டம், இரையுமன்துறை என பல்வேறு பகுதிகளிலும் சுறாமீன்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. குமரி மாவட்டத்தில் அரபி கடலில் அலைகளால் கரை ஒதுங்கும் உயிரிழந்த சுறாக்கள் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை வெளிக்காட்டுவதாக உள்ளது.
44 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக கடலில் வாழும் அதிசய உயிரினம் சுறா இனம். 500 க்கும் மேற்பட்ட இனங்களை கொண்ட இவை கடலின் ஆழமான பகுதியில் வசிப்பவை. இவற்றின் சில இனங்களில் 100 க்கும் குறைவான சுறாக்களே உள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் வேட்டையாடும் சமூகத்தை சார்ந்த இவை கடல் உணவு சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை அழிந்தால் சிறுமீன்கள் அதிகரித்து மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
உணவு, எண்ணை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருடத்திற்கு 10 கோடி சுறாக்கள் வேட்டையாடபடுகின்றன. இவற்றின் துடுப்புகளில் இருந்து ஆசிய நாடுகளில் சூப் தயாரிக்கப்படும் நிலையில் துடுப்பிற்காக அதிகளவில் சுறாக்கள் கொல்லப்படுகின்றன. எனவே வெகு வேகமாக அழியும் சுறா இனங்களை காக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 30 உலக சுறா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் சுறா மீன்கள் அவை செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கி விடுவதால் உடல்நலம் பாதிப்பிற்கு உள்ளாகி அதனால் அதிக அளவில் சுறா உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிர் இழந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் குமரி மாவட்ட கடற்பரப்பில் ஒதுங்கும் சுறாக்கள் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகி இறந்தவைகளாகத்தான் இருக்கும் என கருதுகிறோம்.
பிளாஸ்டிக் குப்பைகள், ரசாயன கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு தேவையற்ற கழிவுகள் கலப்பதால் கடல் தனது இயல்பு நிலையை இழந்து நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. இதனை பெருகி வரும் சுறா இறப்புக்கள் நமக்கு எச்சரிக்கின்றன. சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும் டைனோசார் தற்போது திரைபடங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. இதுபோன்ற ஒரு சூழலை எதிர்கொண்டு வரும் சுறா இனங்களை காக்க வேண்டியது அவசியம். கடல்சார் ஆய்வு நிறுவனம் இது தொடர்பு சிறப்பு கவனம் செலுத்தி உரிய ஆய்வு முடிவுகளை தெரிவிப்பதும், கடலை காக்க பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தவிர்ப்பதும் முக்கியம்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply